சேந்தமங்கலம் அருகே பரபரப்பு: கட்டி முடிக்காத ரேஷன் கடையில் கல்வெட்டு வைத்த அ.தி.மு.க.வினர்: பொதுமக்கள் அதிர்ச்சி

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் ஒன்றியத்தில், கட்டி முடிக்கப்படாத ரேஷன் கடை கட்டிடத்தில், நள்ளிரவு அதிமுக திறப்பு விழா கல்வெட்டு வைத்தனர். இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் பொட்டணம் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், புதிய ரேஷன் கடை கட்ட கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  எம்எல்ஏ தொகுதி  மேம்பாட்டு நிதி ₹14.08 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கட்டடங்கள் கட்டப்பட்டு பூச்சு வேலைகள் முடிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ரேஷன் கடையில்  புதிய திறப்பு விழா கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  அதில் தேதி குறிப்பிடாமல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் கடையை திறந்து வைத்தது போல் எழுதப்பட்டிருப்பதை கண்டு, அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.

அதேபோல் 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பால் கூட்டுறவு சங்க கட்டிடம், சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்கும், புதிதாக திறப்பு விழா கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டை யார் வைத்தார்கள் என தெரியவில்லை. அதிமுகவினர் இரவோடு இரவாக கல்வெட்டுகளை வைத்துச் சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: