பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைகழக மாணவர்களுக்கு மறுதேர்வு: அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில்  உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் பொறியியல் மாணவர்கள் எழுதிய தேர்வு முறை குளறுபடி தொடர்பாக முதலமைச்சர்  ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் பொன்முடி, மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர், டிசம்பரில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய பருவத் தேர்வில் 25 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

சுமார் 4.25 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1.10 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், பி.இ. மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என தெரிவித்தார். இதுகுறித்து உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்படுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் / டிசம்பர் 2020க்குண்டான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் மாணாக்கர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதில் மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும், நன்குப் படிக்கும் சில மாணாக்கர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாவின் அவர்கள், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர். உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணாக்கர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட  முடிவுகளை எடுத்துள்ளார்கள்.

* பிப்ரவரி 2021-இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும்.

* இம்மாணக்கர்கள் இத்தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

* பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணாக்கர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம்.

* தேர்வு 3 மணிநேரம் நிகழ்நிலைத் தேர்வாக நடைபெறும். பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாட்கள் முறையே கடைபிடிக்கப்படும். இத்தேர்வுகள், தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக் கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும்.

* எதிர்வரும் ஏப்ரல் / மே 2021 பருவநிலைத் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும்.

பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் தற்போது ஊரடங்குக் காரணமாக் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான அறிவுப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும். மாணாக்கர்கள் ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்தி தேர்வுக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related Stories: