வேலூர்: கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த இன்று முதல் 14 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் 9 சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள கொரோனா 2வது அலையின் பாதிப்பை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று 10ம் தேதி தொடங்கி வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது, ஆம்புலன்ஸ் சேவை, பத்திரிகை வினியோகம், தீயணைப்பு வாகனங்கள் என அவசர, அத்தியாவசிய போக்குவரத்து தவிர்த்து ஆட்டோ, டாக்ஸி சேவை, பஸ் உட்பட பொது போக்குவரத்துக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள், கொரோனா முன்கள பணியாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.