ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 11 டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் வேலைக்கு செல்லும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்பட அனைத்து மகளிரும் நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டார்.
இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி போக்குவரத்து மண்டலத்தில் உள்ள ஊட்டி கிளை 1, கிளை 2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் மேட்டுபாளையம் கிளை 2 ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் உற்சாகமாக பயணம் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கிளையில் இருந்து ஊட்டி-காந்தல் இடையே 4 பஸ்கள், ஊட்டி-தலைகுந்தா இடையே 2 பஸ்கள், குன்னூர் கிளையில் இருந்து சிம்ஸ் பூங்கா வழியாக 4 பஸ்கள் உட்பட மொத்தம் 11 நகர பஸ்களில் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. பஸ்சில் பயணித்த பெண்கள் சிலர் கூறுகையில்,`பெண்களுக்கு நகர பஸ்களில் இலவசம் என்ற அறிவிப்பு உண்மையிலேயே வரவேற்க கூடியது. ஏழை, எளிய மக்களான நாங்கள் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று பிைழப்பு நடத்தி வருகிறோம். தற்போது பெண்களுக்கு இலவசம் என்பதால் பஸ் டிக்கெட்டிற்காக ஒதுக்கும் தொகையை சேமிக்க முடியும்’ என்றனர். பெண்களுக்கு இலவசம் என்று குறிப்பிடும் வகையில் பஸ்களில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.