மஞ்சூர் : மஞ்சூர் பகுதியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் சாலையோர ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மஞ்சூர் பகுதியில் தாலுகா அலுவலகம், கருவூலம், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு, தனியார் வங்கிகள், அலுவலகங்கள், தேயிலை தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
சுற்றுப்புறங்களில் உள்ள சுமார் 30க்கும் ேமற்பட்ட கிராம மக்கள் தங்களது பல்வேறு தேவைகளுக்கும் மஞ்சூர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஊட்டி, குன்னூர், கோவை பகுதிகளில் இருந்து மஞ்சூருக்கு ஏராளமான அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இதன்காரணமாக, மஞ்சூர் பகுதியில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுதியாகவே காணப்படும். இந்நிலையில், மஞ்சூர் மெயின் பஜார் முதல் மேல் பஜார் வரையிலும் அதேபோல் கீழ்குந்தா சாலையின் இருபுறங்களிலும் பல்வேறு கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. பஜாரில் இடப்பரப்பு மிகவும் குறைவாக உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அரசு பஸ்கள் அனைத்தும் சாலையோரங்களிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இது தவிர, உள்ளூர் தனியார் வாடகை வாகனங்களுக்கும் தனி இடவசதி இல்லாததால் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதுதவிர, சமீபகாலமாக மஞ்சூர் பகுதியில் தனியார்களின் சொந்த உபயோகத்திற்கான வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த வாகனங்களும் பெரும்பாலும் சாலையோரங்களிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், மஞ்சூர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. வாகன ஓட்டுனர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அவதிகுள்ளாகி வருகின்றனர். நேற்று காலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் கீழ்பஜார் முதல் மேல்பஜார் வரை ஏராளமான அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றது. இதில், நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் ஒன்றும் நெரிசலில் சிக்கியது. இதை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு சாலையோர ஆக்ரமிப்புகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மஞ்சூர் பகுதியில் சாலையோர ஆக்ரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.