கருந்தலாக்குறிச்சியில் சேதமடைந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

சின்னசேலம் :  சின்னசேலம் அருகே கருந்தலாக்குறிச்சியில் முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக மின்கம்பத்தை மாற்றவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னசேலம் வட்ட எல்லையில் கருந்தலாக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக பிரசித்திபெற்ற வீரபயங்கரம் அய்யனார் கோயிலுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏராளமான விவசாயிகளும் சென்று வருகின்றனர்.

 கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் இருந்து வீரபயங்கரம் செல்லும் சாலை ஓரத்திலேயே உள்ள புளிய மரத்தின் உள்பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீடு மற்றும் மின்மோட்டார் பாசனதாரர்கள் இணைப்பு பெற்றுள்ளனர். இந்த மின்கம்பம் ஏற்கனவே புளியமரத்தின் உள்பகுதியில் இருப்பதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மரத்தில் ஏறும்போதோ, தொடும்போதோ மின்சாரம் தாக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் அந்த கம்பத்தின் நுனிப்பகுதி அரித்துபோய் சேதமடைந்து உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே புதிய மின்கம்பம் நட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: