முழு ஊரடங்கு எதிரொலி!: சனி, ஞாயிறுகளில் 4,575 சிறப்பு பேருந்துகள் மூலம் 2,05,875 பேர் சொந்த ஊர்களுக்‍குப் பயணம்..!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட அரசு சிறப்பு பேருந்துகள் மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றின் 2ம் அலை என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா நம்பர் 1 ஆக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். 

தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு நேர முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வருகின்ற 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட 4,575 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 875 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: