குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது..!!

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தமிழ்நாடு முழுவதுமாக இன்று தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பரப்புரையின் போது மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஜூன் 3ம் தேதி இந்த தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கடந்த 7ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். 

அதனை தொடர்ந்து நியாயவிலை கடை ஊழியர்கள் இன்று முதல் டோக்கன்கள் வழங்கும் பணியை துவங்கியிருக்கிறார்கள். மதுரை மாவட்டம் திருநகரில் அவர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களை வழங்கினர். டோக்கன் பெற்றோருக்கு 2000 ரூபாய் ரொக்கம் இம்மாதம் 15ம் தேதி வழங்கப்படவுள்ளது. கோவையிலும் நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன்களை வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், டோக்கன் விநியோகம் நடைபெற்று வருகிறது. 

பொருட்கள் வாங்க நியாயவிலை கடைகளுக்கு வருவோர்க்கும் அங்கேயே டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள் எதிர் வரும் 15ம் தேதி அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் 2,000 ரூபாயை ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 

Related Stories: