சென்னை: கொரோனா நிவாரணம் முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் கொரோனா நிவாரண நிதி 4,000 வழங்கும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டார்.
இதையடுத்து முதல் தவணையாக இந்த மாதம் 2 ஆயிரம், அடுத்த மாதம் 2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, கொரோனா நிவாரண நிதி வழங்கும் வகையில் இன்று முதல் 2.07 கோடி பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் பெறும் வகையில், இன்று முதல் வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. . டோக்கன் விநியோகம் தொடங்கிய நிலையில், 15ம் தேதி முதல் ரேஷனில் ரூ.2000 வழங்கப்பட உள்ளது.
குறிப்பிட்ட நாளில்... குறிப்பிட்ட நேரத்தில்...நியாய விலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் கொரோனா வைரஸ் நிவாரண முதல் தவணைத் தொகை எந்த புகாருக்கும் இடமின்றி வழங்கப்பட வேண்டும்.