முழு ஊரடங்கு எதிரொலி!: சொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பசி, பட்டினியுடன் காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்..!!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் காத்துக்கிடக்கின்றனர். பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்து வருகின்றார்கள். 

இன்று முதல் அமலாகியுள்ள முழு ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள், ரயில்களில் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். ரயில்களில் தற்போது முன்பதிவு இல்லாத பெட்டிகள் இல்லை என்பதால் இவர்கள் அனைவரும் முன்பதிவு செய்து தங்கள் ரயில்களுக்காக ரயில் நிலையத்திலேயே காத்துக் கொண்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு நேர முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசியால் வாடி வரும் தங்களுக்கு உணவு தரவேண்டும் என்றும் விரைந்து சொந்த ஊர் செல்ல உதவ வேண்டும் என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: