சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று முதல் 24ம் தேதி வரையிலான காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, கார்கள் ஓடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களில் வசிக்கும் மக்கள், கடந்த இரண்டு நாட்களாக சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.சென்னை, சேலம், கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பணி, தொழில் நிமித்தமாக தங்கியிருக்கும் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், சம்மந்தப்பட்ட நகரங்களில் பரபரப்பாக இயங்கும் பகுதிகள் மக்கள் நடமாட்டம் குறைவாக வெறிச்சோடிக்காணப்பட்டது.