சென்னை: கொளத்தூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடையும், ரம்ஜான் அன்று அவர்கள் அறுசுவை உணவு உண்ணத் தேவையான பொருட்களையும் மு.க.ஸ்டாலின் வழங்குவார். அந்த வகையில், தமிழக முதல்வரும் - கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் தமது இல்லத்தில் நேற்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் - பரிசுப் பொருட்களும் வழங்கி இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 2,200 பேருக்கு கொளத்தூர் தொகுதி திமுக நிர்வாகிகள், அவர்களின் இல்லங்களுக்கு சென்று புத்தாடையையும் பரிசுப் பொருட்களையும் வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உடனிருந்தார்.