பெரம்பூர்: கொளத்தூர் தொகுதி பகுதி செயலாளர் ஐசிஎப் முரளியின் தாயார் இறந்ததையடுத்து அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கொளத்தூர் தொகுதி பகுதி செயலாளராக இருப்பவர் ஐசிஎப் முரளி. இவரின் தாயார் பத்மாவதி(80), நேற்று மதியம் 3 மணி அளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மறைவுச் செய்தி கேட்டு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 7 மணியளவில் பெரவள்ளூர் சதுக்கம் பகுதியில் உள்ள முரளி வீட்டிற்கு நேரில் வந்து மலர் அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.