தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் அன்னையர் நலனை தமிழக அரசு காக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து

சென்னை,: அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். மேலும், அன்னையர் நலனை தமிழக அரசு காக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முன்பாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு தாயார் தயாளு அம்மாளிடம் அன்னையர் தினத்தை முன்னிட்டு பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இதையடுத்து, தனது டிவிட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:தாய்மொழி, தாய்நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு. எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள். மகளிர் நலத்துடன் அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும். இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

Related Stories: