பூமி நோக்கி கட்டுப்பாடின்றி திரும்பிய சீன ராக்கெட்டின் 18 டன் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது

பீஜிங்: பூமி நோக்கி கட்டுப்பாடின்றி திரும்பிய சீன ராக்கெட்டின் 18 டன் பெரிய பாகம், யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல், மாலத்தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்தது. விண்வெளி மையத்தை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் 29ம் தேதி ஹைனனில் உள்ள வின் சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்கலத்தை விண்வெளிக்கு சீனா ஏவியது. விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட் தன்னுடைய பணியை முடித்ததும் கட்டுப்பாட்டை இழந்தது. இது பூமியை நோக்கி திரும்பியது. ராக்கெட்டின் 18 டன் எடை கொண்ட பெரிய பாகம் பூமியில் எந்த இடத்தில் விழும் என்பதை அமெரிக்காவால் கூட கணிக்க முடியவில்லை. இது மக்கள் வாழும் பகுதியில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என அச்சம் நிலவியது. இவ்வாறு விண்ணில் ஏவப்பட்ட பூமியை நோக்கி கட்டுப்பாடின்றி திரும்பும் 6வது அதிக எடை கொண்ட பொருள் இது என்பதால் உலக நாடுகள் உற்றுநோக்கின.

இந்நிலையில், சீன நேரப்படி நேற்று காலை 10 மணி அளவில் ராக்கெட்டின் 18 டன் பெரிய பாகம் மாலத்தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்ததாக சீனா உறுதி செய்தது. இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புகளும் உறுதிபடுத்தின. ராக்கெட்டின் பாகம் யாருக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடலில் விழுந்ததாலும், இது சீனாவின் பொறுப்பற்ற செயலால் நடந்தது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எனவே சீனா விண்வெளி கட்டுப்பாடுகளை மீறுவதாக நாசாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகளே எதிர்த்தாலும் இந்த விஷயத்தை அவர்கள் பெரிது படுத்துவதாக சீனா கண்டுகொள்ளாமலே உள்ளது.

Related Stories: