காஞ்சிபுரம் மருத்துவமனையில் புதிய கட்டிடத்தில் 347 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைக்கப்படுகிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம்: ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் சேமிப்பு மையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் கட்டிடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டிட பணியை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து நிருபர்களிடம் தா.மோ.அன்பரசன் கூறியதாவது: காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மொத்தம் 672 படுக்கைகள் உள்ளன.

இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள 375 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 260 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 115 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி இல்லாதது. புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம்  கட்டிடத்தில் 347 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டிடம் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக கட்டிமுடித்தவுடன் மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. தற்போது 6 திரவ ஆக்சிஜன் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கூடுதலாக 10 திரவ ஆக்சிஜன் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பணி அனைத்தும் நிறைவுற்றாள் நோயாளிகளுக்கு தங்குதடையின்றி அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆய்வின்போது, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: