தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை: கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், கேரளா பகுதிகளில் 1.5 கி.மீ வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும்.

அதேபோல் நாளை (10ம் தேதி) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11ம் தேதி (செவ்வாய் கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சில வடக்கு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,  நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்  பெய்யக்கூடும்.

வருகிற 12ம் தேதி (புதன்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சில வடக்கு  உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90% வரை இருப்பதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன்காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாக இருக்கும். இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்.

அதேபோல் வரும் 11 முதல் 13ம் தேதி வரை மேற்கு வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீசவாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: