சென்னை: சென்னையில் இன்று மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் நாளை முதல் வரும் 24ம் தேதி வரையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். இதனால், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் நேற்று கூட்டம் அதிகரித்தது. இந்தநிலையில், இன்று மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் செயல்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல், 10 நிமிட இடைவெளியில் ஒரு ரயில் என இயக்கப்பட உள்ளது.
ஏற்கனவே, ஞாயிறு முழு ஊரடங்கின்போது 1 மணி நேரத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று நேர நீட்டிப்பு வழங்கி பொதுமக்கள் எளிதில் பயணம் செய்ய ஏதுவாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.