கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு

* காய்கறி, மளிகை, இறைச்சி,

* மீன் கடைகளுக்கு மட்டும்

* பகல் 12 மணி வரை அனுமதி

* போக்குவரத்துக்கு தடை

* வணிக நிறுவனங்கள் டாஸ்மாக் மூடல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 24ம் தேதி காலை 4 மணி வரை  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மளிகை, காய்கறிகள் கடைகள், இறைச்சி, மீன்  கடைகள் மட்டும் மதியம் 12  மணி வரை இயங்க  அனுமதிக்கப்படும். டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அரசு, தனியார் பஸ்கள், வாடகை கார், ஆட்டோக்கள் இயங்கவும் தடைவிதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது.  தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய் தொற்று,  பிப்ரவரி மாத கடைசியில் தினசரி 450 என்ற நிலை மாறி தற்பொழுது தினசரி 26,000க்கும் மேல் பதிவாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் கடந்த 6ம் தேதி காலை 4. மணி முதல் வருகிற  20ம் தேதி காலை 4 மணி வரை பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.  

இந்த நிலையில், நேற்று முன்தினம் (7ம் தேதி) அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திய ஆய்வு கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுநர்களுடன்  கலந்தாலோசித்தும், நோய் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும்,  தமிழ்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும்  தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், வருகிற 10ம் தேதி (திங்கள்) காலை 4 மணி முதல் 24ம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம்  முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கின்போது, பின்வரும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.

 வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு  பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.

 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி  கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை  இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். டன்ஜோ போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன்  விநியோகம் செய்ய நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.   

 முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

 அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு  அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவு கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

 தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

 உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.  

 இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.

 மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

 அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் கூட்ட அரங்குகள்  போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

 கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு  தடையும் தொடர்கிறது.

 அத்தியாவசிய துறைகளான, தலைமை செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில்  மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. துறை தலைவர்கள்  பணியாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

 அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள்  இயங்க தடை விதிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை அவை பின்பற்றலாம்.

 அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டு தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை. குடமுழுக்கு  மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

 ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

 பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

 பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.

 நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை.

 மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய  உறவினரின் இறப்பு, நேர்முக தேர்வு/வேலைவாய்ப்பு  போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

 முழு ஊரடங்கின்போது உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.  மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போது கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

  முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும்  அனுமதிக்கப்படுகிறது. சுகி, ஷோமோட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

 அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

 காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.

 நியாய விலை கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

 தன்னார்வலர்கள் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை / ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

 நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.

 நடைபெற்றுவரும் கட்டிட பணிகள் அனுமதிக்கப்படும்.

 ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.   

 தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும்  ஊழியர்கள் / அலுவலர்கள் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

 திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 20 பேரும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.   

 தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

 முழு ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

 சரக்கு போக்குவரத்திற்கு, தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

 பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.  

 வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று இரவு வரை கடைகள் திறந்திருக்கும்

முழு ஊரடங்கு நாளை (10ம் தேதி) முதல் அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு,  பொதுமக்களும், நிறுவனங்களும் தமக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து  கொள்வதற்காக இன்று (9ம் தேதி) அனைத்து கடைகளும், நிறுவனங்களும்  வழக்கம்போல  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

 * அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம்,  தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ  பரிசோதனை கூடங்கள்,  மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற  மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து,  விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்து செல்லும்  வாகனங்கள், ஆக்சிஜன் வாயு  எடுத்து செல்லும் வாகனங்கள், எரிபொருளை  எடுத்துச்செல்லும் வாகனங்கள்  ஆகியவை அனுமதிக்கப்படும். வேளாண் உற்பத்திக்கு தேவையான  பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள்,  மாட்டுத்தீவனம்  விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

Related Stories: