நெல்லை: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் 800க்கும் மேற்பட்டோர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். தேவை அதிகரித்துள்ளதால் இஸ்ரோவில் இருந்து நேற்று மேலும் 7 டன் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவமனையில் 1240 கொரோனா சிகிச்சை படுக்கைகள் உள்ளன. இவற்றில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சையளிக்கும் 800 படுக்கைகள் நேற்று காலை நிரம்பின. இங்கு கொரோனாவுக்கு முந்தைய சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு அரை டன் (500 கிலோ லிட்டர்) ஆக்சிஜன் மட்டுமே தேவைப்பட்டது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 7 டன்னுக்கு அதிகமான அளவுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.