முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் 33 பேரும் கோட்டையில் பொறுப்பேற்பு

சென்னை: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து, 33 அமைச்சர்களும் தலைமை செயலகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். இதை தொடர்ந்து தலைமை செயலகம் வந்த மு.க.ஸ்டாலின், முதல் மாடியில் உள்ள முதல்வரின் அலுவலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற உடனே தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து, புதிதாக நேற்று பதவியேற்றுக் கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக கே.என்.நேரு, கூட்டுறவு துறை அமைச்சராக பெரியசாமி,

உயர் கல்வி துறை அமைச்சராக பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு, வேளாண்மை துறை அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சராக தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சராக ராஜகண்ணப்பன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சராக வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்ட 33 அமைச்சர்களும் தலைமை செயலகத்தில் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறையின் செயலாளர், உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் பூங்கொத்து மற்றும் சால்வை, நினைவு பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: