சென்னை:கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழக காவல்துறையினர் இரவும் பகலுமாக ஈடுபட்டு வருகினறனர். பொதுமக்களிடம் நேரடியாக பணியில் ஈடுபட்டு வருவதால் போலீசார் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் ஊரடங்கின் போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு நோய் தடுப்பு உபகரணங்களான பிபிஇ கிட், கையுறை, கிருமிநாசினி, முகக்கவசங்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில் நேற்று ரூ.5 கோடி நிதி ஒதுக்கி அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 1.37 லட்சம் போலீசாரின் நலனை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.