அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய 1,200 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சமூக நலத்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான தயானந்த் கட்டாரியா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் (நகர பேருந்து) மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.  பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் சுமார் 40 சதவீதம் பேர் நகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதால், நகர பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்குவதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள சுமார் ரூ.1,200 கோடி இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு, இழப்பு தொகையை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானிய வழங்கவும் அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: