தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலை ஏற்க முடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை

மதுரை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனியார் மருத்துவமனைகளில் அரசால், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணி புரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களை நீதிமன்றம் பாராட்டுகிறது. அதே நேரத்தில் இந்த சிக்கலான நேரத்தை பயன்படுத்தி தனியார் மருத்துமனைகளில் அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வாங்க வேண்டிய கட்டணம் மற்றும் 50 சதவீத படுக்கைகளை நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற அரசாணை முறையாக அமல்படுத்தப்படுகிறதா? இதை அரசு எவ்வாறு கண்காணிக்கிறது? தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் செய்யவேண்டும்? மீறுவோர் மீது எந்த பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்? என்ன தண்டனை வழங்கப்படும்? அரசாணை சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது யார்? இதுவரை கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன? அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

உத்திரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் இருப்பது போல் தனியார் மருத்துவமனைகளின் படுக்கை வசதி, கட்டணம் ஆகியவற்றுக்காக அரசே ஏன் தனியாக இணையதளத்தை தொடங்கக்கூடாது? தமிழக முதல்வர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் எத்தனை பேர் தனியார் மருத்துவமனைகளில் ெகாரோனா சிகிச்சை பெற்றுள்ளனர்? தமிழ்நாடு அரசு ஊழியர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் எத்தனை பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்? என்ற விபரங்களை மத்திய, மாநில அரசுகள் மே 12ல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Related Stories: