நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கோவிட் சிறப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்: 300 படுக்கைகள் 10ம் தேதி முதல் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:  தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகர பகுதியில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை கூடுதலாக அமைத்திடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு வரும் கோவிட் சிறப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த மையத்தில் முதற்கட்டமாக 300 படுக்கைகளும் அடுத்தகட்டமாக 500 படுக்கைகளும் என மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வரும் 300 படுக்கைகள் 10ம் தேதி முதல் செயல்படும்.

அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்தும், அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்தும், மையத்திற்கான மருத்துவர்களும் செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த மையத்திற்கான உணவு மற்றும் பராமரிப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும். அதுபோது நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரித் துறை ஆணையர், முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சியின் கோவிட்-19  கண்காணிப்பு அலுவலர் சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: