கொரோனா அச்சத்தில் வயதான தம்பதி தற்கொலை

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல், வேல் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன் (70), இவரது மனைவி  அஞ்சலை (60). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று இவரது  உறவினர் ஒருவர் இவர்களுக்கு உணவு கொடுக்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது  வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது சமையல்  அறையில் இரண்டு பேரும் தூக்குபோட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து,  மதுரவாயல் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார் 2 பேரின்  உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பினர்.

விசாரணையில், கடந்த மூன்று தினங்களாக அஞ்சலை உடல்நலம்  பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து விட்டு வந்துள்ளனர்.  தங்களுக்கு கொரோனா இருக்குமோ  என்ற அச்சம் காரணமாகவும், மேலும் கொரோனா பரிசோதனை செய்தால் இருவரையும்  தனியாக பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்ததாகவும், அதனால்  இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில்  கூறப்படுகிறது. மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்றும்  விசாரிக்கின்றனர்.

Related Stories: