பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கோவா மாநிலததில் 15 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும், கொரோனா தொற்று பரவல் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 592 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பீதி
அடைந்துள்ளனர். இதையடுத்து, முழு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வரும் 10ம் தேதி காலை 6 மணி முதல் மே 24 அதிகாலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பயணம் நிர்ணயிக்கப்பட்ட விமானம், ரயில் சேவை மட்டும் இயக்கப்படும். மெட்ரோ ரயில்கள் இயங்காது, அதே நேரம் ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவை அவசர பணிகள் என்றால் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஓட்டல்களில் உணவு பொருட்களை நடந்து சென்று தான் பார்சல் பெற்றுக்கொள்ள வேண்டும்.