தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி ஆட்சி புரிந்து புகழ் பெறுவார்: அரசின் 5 அறிவிப்புகளுக்கு வைகோ வரவேற்பு

சென்னை: .மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிற ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கிறது. கொரோனா பாதிப்புகளை ஈடுகட்ட உதவியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ4000 தருவதாக உறுதிமொழி கூறியபடி, முதல் தவணையாக, இந்த மாதமே ரூ.2000 வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். ஆவின் பால் விலை, லிட்டருக்கு ரூ.3க்கு குறைத்து இருப்பது, குழந்தைகளின் வயிற்றில் பால் வார்த்து இருக்கிறது. நாளை முதல், அனைத்து மகளிரும், சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மருத்துவம் பெறுவோருக்கு ஆகின்ற செலவுகளை, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசே செலுத்தும். மக்கள் தெரிவிக்கின்ற குறைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துச் சீர் செய்திட, ‘உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்’ என்ற திட்டம் தொடங்கப்படுகின்றது; அதற்கு பொறுப்பாளராக ஒரு ஐஏஎஸ் அதிகாரி செயல்படுவார் என்ற ஐந்து அறிவிப்புகளின் மூலம்,  எடுத்த எடுப்பிலேயே நடுநிலையாளர்களின் மனதைக் கவர்ந்து கொண்டார். எதிரிகள் வட்டாரம் திடுக்கிட்டுப் போயிருக்கிறது. தமிழகத்தில் ஐந்து என்பதற்கு ஒரு சிறப்பு உண்டு. நிலம், நீர், காற்று நெருப்பு, வெளி இவற்றையே இயற்கையின் அமைப்பாக வகுத்து இருக்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களில், ஐம்பெருங் காப்பியங்கள் தனிச்சிறப்பு பெற்றவை. அறிஞர் அண்ணா மறைந்தபிறகு, திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், திமுகவின் அடிப்படைக் கொள்கைகள் என, ஐந்து முழக்கங்களைக் கலைஞர் எழுப்பினார். அந்த வரிசையில், இன்றைய ஐந்து அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன. இனி ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கு அடையாளம் இது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருடைய எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, ஆட்சி புரிந்து புகழ் பெறுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: