திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க பஞ்சப்பூரில் 40 ஏக்கர் இடம் தேர்வு?.. அமைச்சர் கே.என்.நேரு நாளை ஆய்வு செய்வதாக தகவல்

திருச்சி: தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ளது திருச்சி. மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் சில மணி நேரங்களில் பயணித்துவிட முடியும் என்பதால் அரசுப் போக்குவரத்து கழகம், தனியார் நிறுவனங்கள் சார்பில் திருச்சிக்கு அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை நிறுத்தி எடுத்துச் செல்வதற்காக திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் 6.60 ஏக்கர் பரப்பளவில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் சுமார் 3,100 பேருந்துகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இங்கு வந்து செல்கின்றன. ஆனால், இவ்வளவு பேருந்துகள், தற்போதைய பயணிகளை சமாளிக்கும் வகையில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், சர்வீஸ் ரோடு போன்றவை இல்லாததால், மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதுதான் இப்பிரச்சி னைக்குத் தீர்வுகாண ஒரே வழி என்பது தெரிந்திருந்தும், அதற்கான பணிகளைத் தொடங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. 1990ம் ஆண்டிலிருந்தே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான கோரிக்கை பொது மக்களிடம் இருந்துவந்தது. 1994ல் திருச்சி மாநகராட்சியான நிலையில், சத்திரம் பேருந்து நிலையத்தையொட்டி கரூர் பைபாஸ் சாலையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 2004ல் சாருபாலா தொண் டைமான் மேயராக இருந்தபோது, சென்னை பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள தேவதானம் பகுதியில் தனி நபர்களிடமிருந்து சுமார் 40 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டார்.

அதில் அப்போதைய அதிமுக அரசுக்கு விருப்பமில்லை. மேலும், காவிரிக் கரையிலிருந்து 200 மீட்டருக்குள் அமைந்திருந்ததால், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் காரணம்காட்டி அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தது. எனவே, தேவதானம் திட்டமும் தோல்வியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. பேருந்து நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்ய அரசு சார்பில் மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள், திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர், மதுரை சாலையில் பஞ்சப்பூர், மன்னார்புரத்திலுள்ள ராணுவ பயிற்சி மையம், புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு, தஞ்சாவூர் சாலையில் அரிய மங்கலம் உரக்கிடங்கு ஆகிய இடங்களைப் பரிந்துரைத்தனர்.

இதில், பஞ்சப்பூர் தேர்வானது. அங்கு 244.28 ஏக்கர் பரப்பளவில், பேருந்து நிலையம் அமைக்க திமுக அரசு முடிவு செய்தது. அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான இடத்தைப் பார்வையிட்டுச் சென்றார். ஆனால், அந்தசமயத்தில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. 2011ம் ஆண்டு அதிமுக அரசு அமைந்ததால் திமுக கொண்டுவந்த பஞ்சப்பூர் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அதிமுக நிர்வாகிகள் உதவியுடன் அதிகாரிகள் புதிதாக இடம் தேடினர். அதன்பேரில், பிராட்டியூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் எதிர்புறத் திலுள்ள காலியிடம், பொன்மலைப்பட்டி செல்லும் சாலையிலுள்ள சிறைத் துறைக்குச் சொந்தமான இடம், ஜி-கார்னர் மைதானத்துக்கு எதிரே மாடு வதைக்கூடத்துக்கு அருகிலுள்ள நிலம் உட்பட சிலவற்றைப் பட்டியலிட்டனர்.

இவற்றில் எந்த இடத்துக்கும் அரசிடமிருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, திருச்சியின் கனவுத் திட்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது, கனவாகவே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போதே திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமைக்கப்படும் என்றார். அதேபோல் தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இன்று பொறுப்பேற்றார். அதைதொடர்ந்து நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என். நேரு உள்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில் திருச்சியில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமைக்கும் கனவு திட்டம் நிறைவேற வாய்ப்புள்ளது. அதற்காக பஞ்சப்பூரில் 40 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்ய ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அந்த இடத்தை நாளை திருச்சி வரும் அமைச்சர் நேரு பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: