உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.ஒய் இக்பால் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான எம்.ஒய். இக்பால் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1951ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி பிறந்தவர் இக்பால். அவருக்கு வயது 70. டெல்லியில் வசித்து வந்த இக்பால், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் முடித்துள்ளார். வழக்கறிஞர் படிப்பில் தங்க பதக்கமும் பெற்றுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு சிவில் நீதிமன்றத்தில் தனது பயிற்சியை தொடங்கிய அவர், கடந்த 1993ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்ற ராஞ்சி கிளையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 

பின்னர் கடந்த 1996ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜார்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.ஒய். இக்பால், படிப்படியாக உயர்ந்து 2012ம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து, 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 70வது வயதில் இன்று காலமானார்.

Related Stories: