மும்பை: சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. நாட்டில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனமானது, இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகின்றது. தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாதிக்கட்டோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகின்றது.
மேலும் கடந்த ஒன்றாம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இதன் காரணமாக தடுப்பூசி தேவையும் அதிகரித்துள்ளது. தடுப்பு மருந்து விவகாரம் தொடர்பாக ஆதார் பூனாவாலாவுக்கு இந்தியாவில் இருந்து மிரட்டல் வந்ததாக தெரிகின்றது. இதனை தொடர்ந்து அவர் தனது குடும்பத்துடன் லண்டன் சென்றுவிட்டார். மிரட்டலை அடுத்து அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.
இந்நிலையில் ஆதார் பூனேவாலாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் தத்தா மானே தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், “சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலாவுக்கு தடுப்பூசி தொடர்பாக மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி தயாரிப்பவர் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தால், தடுப்பூசி உற்பத்தியும் பாதிக்கப்படும். உயிருக்கு பயந்து ஆதார் பூனாவாலா இந்தியாவிற்கு வெளியே இருந்தால் அது தலைமை இல்லாத நிலையை ஏற்படுத்தும். எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.