பதற்றத்தில் மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தகவல் !

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.  ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இதற்கிடையில், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாஜக கட்சினர், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

மேலும், இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி மேற்குவங்காள அரசுக்கு கடிதம் அனுப்பியது. மேலும், இந்த வன்முறை தொடர்பாக களநிலவரத்தை ஆராய உள்துறை அமைச்சகத்தின் 4 பேர் கொண்ட குழு மேற்குவங்காளம் விரைந்துள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து வன்முறையை தூண்ட முயற்சிக்கிறார்கள். புதிய அரசு ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரம் கூட ஆகவில்லை அதற்குள் மத்திய அரசு சார்பில் கடிதங்கள் அனுப்புகின்றனர்.

மேலும், குழுக்கள் மற்றும் தலைவர்கள் இங்கு வருகின்றனர். மக்கள் திரிணாமுல் கட்சிக்கு அளித்த வெற்றியை அவர்கள் ஏற்க தயாராக இல்லை. மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவித பாகுபாடும் இன்றி தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: