கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவர்’ : மத்திய அமைச்சர் எச்சரிக்கை

புதுடெல்லி: ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் தினமும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ேடார் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தை மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தலைமையில் நடந்தது.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு 34.5 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்வது முக்கிய பணியாக உள்ளது. வரும் வாரங்களில் ரெம்டெசிவர் மருந்து வினியோகத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தித் திறனை அதன் உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். மற்ற அத்தியாவசிய மருந்துகளின் இருப்பையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பதுக்கி வைத்தல், கள்ளச்சந்தை விற்பனையை தடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தலைவர் டாக்டர் வி.ஜி.சோமானி கூறுகையில், ‘அத்தியாவசிய மருந்துகளின் பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனையை தடுக்க குழுக்களை அமைத்து கள ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: