காட்டு யானை கூட்டம் தமிழக எல்லைக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை

ஊட்டி: தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வயநாடு மாவட்டம் தனியார் தேயிலை தோட்டத்தில் நுழைந்த 25க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் தமிழக, கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. 3 மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் எல்லையில் அமைந்துள்ளது பாட்டவயல் கிராமம். இந்த கிராமத்திற்கு அருகே கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் பெருன்கோடு தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.

இந்த தேயிலை தோட்டத்தில் வழக்கம்போல், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது, அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய 25க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தொழிலாளர் பணிபுரியும் பகுதியை நோக்கி வந்துள்ளது. அப்போது, தோட்ட தொழிலாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு ஓடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் கேரள வனத்துறையினர் பட்டாசு வெடித்து 25க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை விரட்டினர்.

விரட்டப்பட்ட காட்டு யானை கூட்டம் நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதியான பாட்டவயல் கிராமப்பகுதிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதால், அவைகள் தமிழக எல்லைக்குள் வரவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த யானை கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட குட்டிகளும் உள்ளன.

Related Stories: