ஒரே நாளில் கணவன், மனைவி பலி இறப்பிலும் இணை பிரியாத தம்பதி

திருவொற்றியூர்: எர்ணாவூரை சேர்ந்தவர் தியாகராஜன்(63). ஓய்வு பெற்ற மின் ஊழியர். இவரது மனைவி ராஜலட்சுமி(53). இவர்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். ராஜலட்சுமிக்கு சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தியாகராஜன் வீட்டில் தனியாக இருந்தார்.  அவரது மகன் மகள் இருவரும், ராஜலட்சுமியை பார்க்க, மருத்துவமனை சென்று தாயை பார்த்து விட்டு வீடு திரும்பினர். திரும்பி வந்து பார்த்தபோது, தியாகராஜன் பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர் பரிசோதித்ததில் தியாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கிடையில், தந்தை இறந்ததை தாய் அறிந்தால் தாங்க மாட்டார் என்பதால், ராஜலட்சுமிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ராஜலட்சுமி, அடுத்த சில மணி நேரங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த தகவல் தெரியாமலே மனைவியும் இறந்த சம்பவம் எர்ணாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: