மல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளரும் மதுராந்தகம் தொகுதி வேட்பாளருமான மல்லை சத்யா தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில், அவரது தோளை தட்டிக்கொடுத்து மு.க.ஸ்டாலின் நம்பிக்கையூட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற மதிமுக எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் சென்றார். அப்போது வெற்றி பெற்ற மதிமுக எம்எல்ஏக்களுக்கு வாழ்த்துக் கூறிய மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவரையும் நிறுத்தி குழு புகைப்படமும் எடுத்தார்.  இந்தச் சந்திப்பின்போது மல்லை சத்யாவின் முகம் வாடிய நிலையில் இருந்ததை கண்ட மு.க.ஸ்டாலின், இறுதியாக அவர்கள் அங்கிருந்து புறப்படும் போது மல்லை சத்யாவின், தோளை தட்டிக் கொடுத்து விடுங்க பார்த்துக்கலாம் என தைரியம் ஊட்டியிருக்கிறார்.

இதனால் நெகிழ்ந்து போன மல்லை சத்யா, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட நுணுக்கமாக ஒவ்வொருவரையும் ஸ்டாலின் கவனிக்கத் தவறவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார். மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யா தான் வெற்றிபெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் அங்கு முடிவுகள் மாறியிருப்பது திமுக தலைமைக்கும், மதிமுக தரப்புக்கும் சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.

Related Stories: