புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.  இன்று முதல் வரும் 20ம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மளிகை, காய்கறி, தேநீர் கடைகள் மற்றும் இதர கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதர கடைகளை திறக்க அனுமதி கிடையாது.  அரசின் புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் வகையில் தமிழக டிஜிபி திரிபாதி 9 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் ஐபிஎஸ் அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாடுகளை கண்காணிக்கவும், கட்டுப்பாடுகளை மீறும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு குழுவில் சென்னை மாநகரத்துக்கு ஐஜி ஜெயராம் தலைமையிலும்,

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஐஜி சாரங்கன் தலைமையிலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ஐஜி வனிதா தலைமையிலும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு டிஐஜி பாண்டியன் தலைமையிலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்துக்கு ஐஜி தினகரன் தலைமையிலும், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டத்துக்கு ஐஜி சஞ்சய் குமார் தலைமையிலும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டத்துக்கு ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி தலைமையிலும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஐஜி லோகநாதன் தலைமையிலும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்துக்கு ஏடிஜிபி சுஷில்குமார் யாதவ் தலைமையிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்துக்கு ஐஜி முருகன் தலைமையிலும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு குழு இன்று முதல் தனது பணியை தொடங்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: