மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்: மேற்குவங்க மாநிலத்தை கலவர பூமியாக மாற்றிவிட்டார்: எல்.முருகன் குற்றச்சாட்டு

சென்னை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டித்து தமிழக பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மேற்குவங்காளத்தை கலவர பூமியாக மாற்றிவிட்டார் என்று எல்.முருகன் குற்றம்சாட்டினார்.   மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பாஜ -திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜ சார்பில் அனைத்து மண்டல அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கே.விஜய் ஆனந்த், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் வி.பி.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 ஆர்ப்பாட்டத்தின் போது எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:  மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜவினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த கலவரத்தில் பாஜவினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.   மேற்குவங்காளத்தை கலவர பூமியாக மம்தா பானர்ஜி மாற்றி இருக்கிறார். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மீது அம்மாநில போலீசார் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: