சென்னை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டித்து தமிழக பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மேற்குவங்காளத்தை கலவர பூமியாக மாற்றிவிட்டார் என்று எல்.முருகன் குற்றம்சாட்டினார். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பாஜ -திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜ சார்பில் அனைத்து மண்டல அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கே.விஜய் ஆனந்த், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் வி.பி.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.