ரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் : சிசிடிவி கேமராவில் பதிவு

திருமலை: பாகாலா ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலரை அதிகாரிகள் பாராட்டினர். மேலும், இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா மற்றும் திருப்பதி வழியாக கடப்பா செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.05 மணியளவில் திருப்பதி ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரயிலில் பயணம் செய்த  தம்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். இவர்கள் திருப்பதியில் இறங்க வேண்டிய நிலையில் ரயில் 25 நிமிடம் காத்திருந்தும் அவர்கள் தூக்கத்தில் ரயிலிலேயே இருந்து விட்டனர். இதற்கிடையே, ரயில் பாகாலா நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, தூக்கத்திலிருந்து விழித்த தம்பதி ரயில் பாகாலா ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

அங்கு ரயில் நிலையத்தை கடந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் இருந்து அவசர அவசரமாக தம்பதியினர் கீழே இறங்கினர். இதில்,  கணவர் இறங்கி விட்டார். அவரது மனைவி இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார். அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் சதீஷ் அந்த பெண் ரயிலுக்கு அடியில் சிக்காமல் காப்பாற்றினர்.  இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு ரயில்வே  காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: