மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டம் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு தீர்ப்பு கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு 2018ம் ஆண்டு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த மும்பை ஐகோர்ட், மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை தடை செய்யவில்லை. ஆனால் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியது. மாறாக, மராத்தா சமூகத்தினருக்கு கல்வியில் 12 சதவீத இட ஒதுக்கீடும், வேலைவாய்ப்பில் 13 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கலாம் என்று மும்பை ஐகோர்ட் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணை நடத்தி மராத்தாக்களின் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தது.