மகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய மராத்தா சமூகத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டம் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு தீர்ப்பு கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு 2018ம் ஆண்டு கொண்டு வந்தது.  இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த மும்பை ஐகோர்ட், மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை தடை செய்யவில்லை. ஆனால் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியது. மாறாக, மராத்தா சமூகத்தினருக்கு கல்வியில் 12 சதவீத இட ஒதுக்கீடும், வேலைவாய்ப்பில் 13 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கலாம் என்று மும்பை ஐகோர்ட் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணை நடத்தி மராத்தாக்களின் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தது.

நீதிபதி அசோக் பூஷன் தலைமையில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், இந்திரா சஹானி வழக்கில், 50சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என கடந்த 1992ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆலோசிக்க வேண்டிய அளவுக்கு மராத்தாக்கள் கல்வியிலேயோ பொருளாதாரத்திலேயோ பின் தங்கிய சமூகத்தினர் அல்ல. மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசியல் சட்டத்திற்கு முரணானது. எனவே அந்த சட்டம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Related Stories: