ராமேஸ்வரம்: தமிழக கடல் பகுதியில் கடந்த ஏப். 15 முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. நாட்டுப்படகுகளில் வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக் ஜலசந்தி கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 11 நாட்டுப்படகுகளை சிறைபிடித்தனர். படகுகளில் 86 மீனவர்கள் இருந்தனர். இவர்களை நடுக்கடலிலேயே வைத்து விசாரணை செய்த கடற்படையினர் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். 11 நாட்டுப்படகுகளின் பதிவு எண், பிடிபட்ட மீனவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.