தர்மபுரி: தர்மபுரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி கொரோனா சிகிச்சை பிரிவில் பயன்படுத்திய மருத்துவக்கழிவுகள் மற்றும் பயன்படுத்திய கொரோனா தடுப்பு ஆடைகள், திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி அருகே நல்லாம்பட்டி தனியார் பொறியியல் கல்லூரியில், கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு பயன்படுத்திய, மருத்துவ கழிவுகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அலுவலர்கள் அணிந்திருந்த, கொரோனா தடுப்பு கவச உடைகளை வளாகத்தில் திறந்தவெளியில் குவித்து வைத்துள்ளனர்.