பொன்னை அடுத்த கீரைச்சாத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதால் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பொன்னை: பொன்னை அடுத்த கீரைச்சாத்து கிராமத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த கீரைச்சாத்து கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், கீரைசாத்து கிராமத்திற்கு செல்லும் குடிநீர் மேல் தேக்க தொட்டிக்கு மின்சாரம் கிடைக்காமல் போனது. இதனால், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்களது விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் பல்வேறு முறை மின்சாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: