லண்டன்: ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யுரோ-2020 கால்பந்து போட்டியில் விளையாடும் அணிகள், கொரோன பீதி காரணமாக வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள யுஇஎப்ஏ அனுமதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யுரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய யுரோ-2020 கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அந்தப்போட்டிகள் இந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை ஐரோப்பியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி லண்டனில் நடக்கிறது.
இந்நிலையில் கொரோனா 2வது அலை ஐரோப்பிய நாடுகளையும் அச்சறுத்திக் கொண்டு இருக்கிறது. அதனால் வீரர்களில் யாராவது கொரோனா தொற்று ஏற்பட்டால், வீரர்களின் பற்றாக்குறை ஏற்படும். எனவே ‘ஒவ்வொரு அணியும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.
அதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான (யுஇஎப்ஏ) வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள நேற்று அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு அணியும் வீரர்களின் எண்ணிக்கையை 23லிருந்து 26ஆக உயர்த்திக் கொள்ளலாம். இந்த உயர்வு இப்போது நடைபெறும் ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றில் விளையாடும் அணிகளுக்கும் பொருந்தும்.