டெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று டெல்லியில் நடைபெறும் 31வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வென்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பையும் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அவற்றில் 4ஆட்டங்களில் வென்று பட்டியலில் 4வது இடத்தில் நிற்கிறது. ஐதராபாத் அணியில் திறமையான வீரர்கள் இருந்தும் இன்னும் தொடர் வெற்றி வசப்படவில்லை. புதிதாக கேப்டனாகியுள்ள கேன் வில்லியம்சன் அதனை செய்து முடிப்பார் என்று எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ரோகித் தலைமையிலான மும்பை அணி அவ்வப்போது தட்டுதடுமாறினாலும் யாராவது ஒருவர் பொளந்துக்கட்டி அணியை கரை சேர்த்து விடுகின்றனர். அதை சமாளித்தால் ஐதராபாத் இன்று வெற்றியை வசப்படுத்த முடியும். கூடவே வெல்லும் அணி பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொள்ளும்.