பாஜ அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து தொடர் அறவழி போராட்டம் எம்பி ஜெயக்குமார் பங்கேற்பு

திருவள்ளூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்பி பதவியைப் பறித்த ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து நடைபெற உள்ள போராட்டம் குறித்து திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். நகரத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஜான் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் அருள்மொழி, சம்பத், வடிவேலு, பூண்டி ராஜா, சரவணன், ரகுராமன், ரமேஷ், பிரகாஷ், சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, ராகுல்காந்தி மீது திணிக்கப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்த பாஜ அரசின் அராஜகப் போக்கை கண்டித்து மாதம் முழுவதும் அறவழிப் போராட்டம் நடத்துவோம் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னேரி எம்எல்ஏ துரைசந்திரசேகர், மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், மோகன்தாஸ், அஸ்வின்குமார், வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் வட்டாரத் தலைவர்கள் பழனி, முகுந்தன், ராமன், சதீஷ், செல்லவகுமார், கார்த்திகேயன், ஜோதி, சுதாகர், கோவிந்தராஜ், பொன்னுரங்கம், வில்சன், உதயா, காந்தி, கோடீஸ்வரன், குப்பன், மூர்த்தி, பார்தசாரதி, முகமது சபீர், துரைபாபு, சாமுவேல் உள்பட நகர, வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பல்வேறு அணி நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை திருவேற்காட்டில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பவுன்குமார், இமையா கக்கன், குணாநிதி, வி.அருணாசலம், மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கபிலன், பூவை காமராஜ், புழல் குபேந்திரன், சென்னை மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கே.ஜெயக்குமார் எம்பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், ‘‘அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு மாத கால தொடர் அறவழி போராட்டங்கள் நடத்த வேண்டும். இதுகுறித்து பல்வேறு சமூக வலைதளங்கள், ஊடகங்களில் மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பரப்புரை, துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் தெருமுனை பிரசாரக் கூட்டங்களில் ஈடுபட வேண்டும். வரும் 15ம் தேதி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.’’ என்றார். பின்னர், இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post பாஜ அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து தொடர் அறவழி போராட்டம் எம்பி ஜெயக்குமார் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: