மாமல்லபுரம் அருகே சாய்ந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் குழிப்பாந்தண்டலம் கிராமம் உள்ளது. இப்பகுதி சாலையோரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மின்கம்பங்கள் நடப்பட்டன. பின்னர் இந்த கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் குழிப்பாந்தண்டலம் கிராமம் அருகே ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் காற்று வீசும்போது, மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, அங்குள்ள குடிசை வீடுகளின்மீது தீப்பொறிகள் விழுகின்றன. இதனால் அங்கு பல்வேறு தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மேலும் இச்சாலை வழியே செல்லும் கனரக வாகனங்கள் மீது இந்த மின்கம்பிகள் உராய்கின்றன.

இதனால் குழிப்பாந்தண்டலம் கிராமப் பகுதியில் உள்ள சாலையோரத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதுதவிர, மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள், கையில் எட்டி பிடிக்கும் அளவுக்கு தாழ்ந்துள்ளன. இதனால் அவ்வழியே பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இந்த மின்கம்பங்களை மாற்றியமைத்து சீரமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, அபாயகர நிலையில் உள்ள அனைத்து மின்கம்பங்களை மாற்றி சீரமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: