திருமலை: விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு 150 டன் ஆக்சிஜன் ரயிலில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கலெக்டர் வினய்சந்த் தெரிவித்திருப்பதாவது: கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படாமல் இருக்க உடனடியாக ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இந்த ஆக்சிஜன் விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. விசாகப்பட்டினம் எஃகு ஆலை 100 முதல் 150 டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.
இந்த தொழிற்சாலையில் மொத்தம் 5 ஆக்சிஜன் பிளாண்ட் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 2,800 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறது. மத்திய அரசு உத்தரவின்படி கொரோனா நோயாளிகளுக்காக திரவ ஆக்சிஜனை கூடுதல் உற்பத்தி செய்ய விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலை ஏற்பாடு செய்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்காக விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் இருந்து 150 டன் ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விசாகப்பட்டினம் வந்துள்ள ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 150 டன் ஆக்சிஜனை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.