புதுச்சேரி: நடிகர் விவேக்கின் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை போல கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி அடுத்த கோரிமேடு காவலர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனி கவனிப்பு மையத்தை தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விவேக்கின் மரணத்திற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். ஆனால் அவரது மரணத்திற்கு பிறகு தடுப்பூசி போடுவது வெகுவாக குறைந்துவிட்டதாக கூறிய அவர், விவேக்கை பின் தொடரும் இளைஞர்கள் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை ஒரு இயக்கமாக தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.