வருசநாடு பகுதியில் கரடிகள் நடமாட்டம்: மக்கள் அச்சம்

வருசநாடு: வருசநாடு பகுதியில் கரடிகள் நடமாட்டத்தால் மக்கள் வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர். வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட காந்திகிராமம், சீல முத்தையாபுரம், மேல்வாலிப்பாறை, முத்துராஜபுரம், முத்துநகர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் விட்டில், ஈசல் உள்ளிட்ட பூச்சிகள் அதிகம் உலா வருகின்றன. இவற்றை உண்பதற்காக கரடிகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வர துவங்கியுள்ளன. இதனால் இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலே பொதுமக்கள் வெளியில் வர மிகவும் அச்சப்படுகின்றனர்.

இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் கரடிகள் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராம மக்கள் யாரும் வெளியே செல்வதில்லை. அப்படியே சென்றாலும் வனத்துறையினர் அனுமதி மறுப்பதுடன் சோதனை என்ற பெயரில் அதிக விசாரணை நடத்துகின்றனர்.

தற்போது கரடிகள் நடமாட்டத்தால் பகலில் கூட அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை. எனவே வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதியில் விரட்டி எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: